Samstag, 24. Januar 2009

தேச விடுதலை.

நீ மரிப்பதற்குத் தயாராகிவிடு
தேசம் பறிபோவதற்குள்
உனது குருதியை அவர்கள் பறித்துக் கொள்வதில்
களைத்திருக்கும் வேளை

மெல்லச் சாய்த்திருக்கும் கருவியை இயக்கு
அவர்கள் ஓராயிரம் குண்டுகள் பொழிவதனால்
பிழைத்துக் கொள்வார்கள்
வெள்ளைத் தேசமெங்கும் ஆயுதம் விற்று

விடிதலுக்கு இன்னுஞ் சில கணமே
நீ நெஞ்சு நிமிர்த்திச் சூரியனைப் பார்ப்பதற்குள்
இருள் கவிந்துவிடுமாயின்
தூரப் போய்விடு தமிழர்மீதான உலக யுத்தமே என்றுவிடு

கடிப்பதற்குச் சயனைட்டும்
குடிப்பதற்கு ஆற்று நீரும்
உன்னைக் காத்திருக்கும்
நியாயம் என்பது மரணத்தில் ஒப்பிக்கப்படும்

நெடிய வானம் உனக்கான தேசத்தை
தன் பருத்த உடலுக்குள் புதைத்திருக்கு
தேகத்தைத் தொலைப்பவர்களுக்கு
தெளிவுறுவதில் பிரச்சனைகள் இருப்பதற்கில்லை

கரும் புகை உனது சுடு கருவியிலிருந்து
வெளிவருவதற்குள் உனது உயிர் பிரிந்து போகலாம்
மௌனித்திருக்கும் உனது வாய்க்குப் பதிலாக
விழிகளால் பேசிவிடு

ஓ...நியாயமற்றவர்களே!
ஆசையைத் துறக்கச் சொல்லிய உங்களது புத்தர்கள்
உயிர் கொல்வதற்கு எப்போது கற்பித்தார்கள்?
அவர்களது செவிகளுக்குக் கேட்கும்படி கேட்டுவை

ஏனென்றும் எதற்கென்றும் கேட்க நாதியில்லையானால்
எவருக்காவும் எதற்காகவும் நீ துப்பாக்கியைக் களையாதே
மரிப்பதற்குத் தயாராகி விடு
மரிப்பதனால் நீ விடுதலையைப் பெற்றுவிடுகிறாய்

Keine Kommentare:

Kommentar veröffentlichen