Sonntag, 9. September 2012

ஓட்டு இரகம்!

ஜனங்களே, ஆத்தை படுத்துறங்கிய
 அடுப்படியும் முற்றமும்
அமைதி துறந்த அப்புவின் சாக்குக் கட்டிலும்
 மானுடத்து எச்சமாக மக்கிக் கிடக்க
எந்தச் சுகமுமற்ற ஈழத்துக் கிராமங்கள்
 வடக்கும்,கிழக்குமாச்சு!


இதற்காகச் சாதிக்கொருவனுமாக,
 பிரதேசத்துக்கொருவனுமாகச்
சவப்பெட்டி செய்துகொண்டிருக்கிறான்கள்
 சட்டப்படி சாவோலை தருவதற்கு -அவர்கள்
காலத்தைக் குறித்து அச்சப்பட்டுக்கொண்டும்
 தங்கள் வாசற் தலங்களுக்குள் நாறும்
மலங்களைக் காத்தப்படி ஆயுதங்களால்
 மீள மீளத் திடப்படுத்துப்படுகின்றனர்


போராளிக்குச் சோறுபோட்ட குற்றத்துக்காகவும்
 நோட்டீசு ஒட்டியதற்காவும்
கூட்டத்துக்குப் போனதற்காகவும்,போராடப் போனதற்காகவுமாக
 சிறைகளில் இன்னும் இருண்டு பட்டுக் கிடக்கும்
ஈழத்து மனிதர்களது வாழ் காலமும்-கனவும்





இவற்றுக்கெல்லாம் மூலமான தேசியக்  கோவணங்கள்
 தம்மால் அடைத்து வைத்துக் கொல்லப்பட்ட
அப்பாவிகளுக்குத் துரோகிச் சான்றிதழ் கொடுத்துக்கொண்டிருந்த
 காலத்தைப்  பறிகொடுத்துவிட்டுக்  கைதிகளுக்காகக்
கண்ணீர் சொரியும் காலமுமாகத் தமிழ் மக்கள்
 காதுகளுக்குத் தினமுமொரு பூ வைக்கப்பட்டுக்கொண்டிருக்க


கிழக்கிலோ தேசியத் தலைவரது வளர்ப்புப்
 பிராணிகளோ வடக்குக் கிழக்கென ஓட்டுகள் பிரித்து
ஐந்தொகை எழுதிக்கொண்டுமுள்ளனர்!
 கோவிலுக்குக் காவடி தூக்கிய பழக்கதோசத்தில்
ஒரு சிலரின் கரங்களில் "ஒரு முகமூடியும்"
 சில கோவணத் துண்டுகளுமாகத் தமிழரின் உரிமை
தெருவில் உலாவிக் கொண்டிருக்கிறது


இருவேறு குகைகளுக்குள் இடறிவிழும்
 சில நடைபுணங்கள்
எல்லைகளில் எரிச்சலைக்  கொட்டுகின்றன
 இதற்காகப் பல வர்ணக் கோலங்களுடன்!


இந்த இடருக்குள்
 தலைகளைத் தறித்துச் சாக்கிலிட்டவனே
மக்களின் குரலாகத் தன்னையும்
 விழிகள் முன் நிறுத்துகிறான் பல் முனைகளில்!


இத்தோடு, மக்களின் சில்லறைகளைத்
 தட்டிப் பறித்த சில அண்டங் காகங்களோ
சிறைக் கைதிகள் விடுதலைக்காக "ஏந்துக உறவுக்கொடி" என்றபடி
 தெருவோரப் பிணக்குவியல்களோ
ஏதோவொரு கனவான்(ள்)கள் படையலாக
 துர் நாற்றமெடுத்துத் துயில்கின்றன தேசமெங்கும்!


இப்படிக் கடுப்பேற்றும் எனது ஆயுட்காலத்துள்
 இராணுவத்தான் குடியமர்ந்ததும்
குடி கலைத்ததும் புலிவாற் குஞ்சத்துள்
 அரிப்பெடுக்கிறது-கொட்டிய குருதி உலர்வதற்குள்
வழித்து நக்கும் இத்தகைய நாய்களோ
 நாக்கைத் தொங்கப்போட்டு
நடுச் சந்தியில் காத்திருக்கிறது
 தேசிய விடுதலையின் பெயரால்...


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி.
09.09.2012

Sonntag, 27. Mai 2012

நானே தேசம்,தேசமே நான்!

நான் மனிதப் பிணங்களின் மீதிருந்து
 தேசியப் படையலிட்டேன்
என் தேசக் கன்னிக்கு
 அவள் திரண்டு முறுகி வளர்ந்திட்டபோது
என் தேவைக்காக இன்னொரு தியாகத்திற்குத் தயாரகிடும் படி
 தேசமக்களைச் சில பிணங்களுடாய்த் திரட்டிக் கொண்டேன்

பால்கொடுத்த மார்புக்காம்பு உலர்வதற்குள்
 பிள்ளையைப் பறிகொடுத்த தாயொருத்தி என்னைத் திட்டித் தீர்த்தாள்
வீட்டுக்கொரு போராளியற்ற வீடுகளெல்லாம் நாட்டுக்குத் தேவையற்றெதன அவளுக்குச் சொல்வேன்

என் கிளிதட்டு விளையாட்டில்
 ஆத்தை அப்பனையிழந்த அநாதைகளை
அடுத்த வேள்விக்காய் அநாதையென்ற நாமம் தவிர்த்து
 ஆசையாய் அன்பாய் தேசியப் பாலூட்டி வளர்த்தபோது
பூனையாய் வந்த சுனாமி கவ்விச் சென்றது.

அறுப்புக்கு வளர்த்த என் கிடாய்கள்
 கட்டறுத்துத் தனி வழிபோன பின் நான்  மெலிந்து விட்டேன்
என்னைச் சொல்லித் தேசமும்
 தேசத்தைச் சொல்லி நானும் இரண்டறக் கலந்து புனிதமானதில்
நான் தொலைத்தது எதுவுமில்லை
 என்றபோதும்
மக்கள் இன்னும் என்னைக் காத்தபடிதாம்!

இதுதாம் தேசப்பற்று.

இன்னொரு சுனாமியுள் கைப்பிடி மண்ணாய்க் கரையக் காத்துக்கிடக்குமொரு தேசத்தில்
 நான்-நீயென்றுவேறு உரிமையிட
அந்த மாபெரும் அரக்கி விட்டுவிடாள்போலத்தாமிருக்கு.

காடுகளுக்குள் விறகுவெட்டிச் சோறுண்ணும் கூட்டத்துக்கு
 புலப்பெயர்வின் புதிய வாரீசுகள் வாலை முறுக்கி
தேசியச் சவாரியிட
 சாவதென்னவோ அந்தக் காட்டுவாசிகள்தானே!

நான் மௌனித்திருப்பதால்
 எனது குரலாகப் பல வர்ணக் காகிதங்கள் முளைப்பதில்
எனக்கெதுவும் பாதகமில்லை
 ஆனால்
என் பெயர் சொல்லிச் சில சில்லறைகள் தாள்களாக மாறுவது எனக்குத்தாம் ஆபத்து.

எதுவும் தெரியாத பொழுதொன்றில்
 எனக்குத் தெரிந்து மொழியுனூடாய்ப் பேசுவதொன்றும்
எனக்குக் கடினமானதில்லையென்பதால் இது நோகத்தக்கதல்ல.

என் மொழியின் வீச்சில் உதிருமந்தச் சருகுகளை
 இன்று போய் நாளை வாவென்பேன்
அதுவரையும்
பேசுங்கோ அன்புத் தம்பிகளா பேசுங்கோ
 அண்ணாவின் அருமையையும்
அந்த ஆத்தாளின் அழுகையையும்
ஒருதட்டில் நெறுத்தபடி.

31.03.2005

வூப்பெற்றால்
ஜேர்மனி        
 ப.வி.ஸ்ரீரங்கன்

Samstag, 21. April 2012

கஷ்டம் உனக்கு இல்லை:மற்றவர்கட்கு மட்டுமே!

உன்னிடம் இல்லாதபோதும்
நட்பு,சொந்தஞ் சொல்லி வருபவருக்கு
கேட்பதைக் கொடுத்து உறவைக் காத்துவிடு.
உனது "கடன் பட்ட நெஞ்சு" கலங்கிக் கரையும்போது
உன்னை விட்டகன்ற தடங்களின் பின்னே
வெறித்துப் பார்ப்பதைத்தவிர
உன்னால் என்ன செய்ய முடியும்?

இருபது ஆண்டுக்கு முன்
தங்கையின் "பட்டப்படிப்பு வெற்றிக்கு" (ப்) பரிசு அளிக்க
கவிஞ நண்பனுக்கு நீ கடன் கொடுத்தாய்,
சில ஆயிரம்டொச்சு மார்க்கோடு அவனது கவிதை முகமும் கலைந்துபோச்சு!

வேலையிழப்பு நஷ்ட ஈட்டுப் பணத்தைக் கண்டபோது
கை நீட்டியவர்களை நீ மறக்கவில்லை!
நீட்டிய கையை நிறைத்தே உனது அந்த 24000 யூரோவும்
கரைந்து காணாமற் போச்சு!

அண்ணனுக்குத் தம்பிக்கு,மாமாவுக்கு மச்சாளுக்கென...





இப்போ, உனக்குக் கடன் தந்த சிற்றி பேங்கோ
உன்னை விட்டு விடுவாதாகவில்லை! நீ,கவிஞனின்
இருபதாண்டு ஏமாற்றையும் கண்டுகொள்ளவில்லை!,
வேண்டியபோது சிரித்த முகங்களை மீள மீள
ஆற்றிலிட்டுக் குளத்திற் தேடுவதாக...

வேண்டியவர்கள் மீளத் தருவதை மறந்தார்.

வேதனைப்பட வைக்கும் வங்கிக் கடனோ
வேலைக்குப் போகும் காரையும் விட்டுவைக்காதவொரு சூழலுள்
வேடிக்கை மனிதராகிறாய் நீ!

வேதனைப்படாதே!
உனக்கென்றொரு காலம் வரும்.
கடன் பட்ட(வங்கியில்) நெஞ்சு காயந்து போகாதவரை
உடல் உழைத்துக்கொண்டிருக்கும்.

உப்பிட்டாய்-நட்பை,உறவை உயிரென்றாய்
பணத்துக்கு முன் இவை செல்லாக் காசென்று
உரைக்கின்ற காலத்துள்உன்னைக் கைவிட்டவர்களுக்கு
என்ன பெயரடா பாட்டாளி?

உழைத்துக்கொண்டு ஓடாகு,
ஒரு நாள் ஓய்ந்து நீண்ட தூக்கத்துக்கு
ஒத்திகை பார்க்கவாவது இந்த உறவுகள்
உன் இதயத்துள் ஏதோவொரு மூலையில்
எதையாவது கிறுக்கட்டுமே!


ஸ்ரீரங்கன்
21.04.2012