Donnerstag, 16. April 2009

மனிதாபிமானம்

மனிதா
உன் அபிமானம்...



க்களைக் கொல்லு
மக்களைக் கொல்லு
சும்மா கொல்லு,சுகமாய் இருக்கும் நீ கொல்லு!

மனிதாபிமானம் கூடவே கூடாது!

புரட்சிக்கு அது எதிரானது
டோல்ஸ்ரோய்கூடத் துரோகியாகிய
வரலாறு இந்த உலகத்தில்தாம் நிகழ்ந்தது


நீ கூட அறிந்திருப்பாய்
புலிகொல்வது தியாகமென அதன் வால்பிடிகள் அவிழ்க்க
சிங்கம் கொல்வது ஜனநாயத்துக்கு ஆனதென-அதன்
வால்கள் இயம்ப

அந்தோ நீ
இடையினில் அமுதஞ்சுரக்க
நஞ்சுக் கடலைக் கடைவதால்
மக்களது ஆயுட் காலத்தை நீட்ட முடியுமா?
ஆதலால் கொல்லுதலைப் பழகு



மரணங்கள்
கொலைகள் வீழ்த்தும் களங் குறித்து
கவனத்தில்கொள்ளாதே ஆவது பின்னால்
துரோகத்தின் தொடரே!

மனிதாபிமானம் காட்டாதே
புலிக் களத்தில்
போராடிச் சாவது
துரோகம் மறுத்த தியாகமே
கடைசிப் புலியுள்ளவரைப் போராட விடு
இறுதியில் நான் புரட்சி செய்ய!

மருந்துக்கும் சரணடைவைப் பேசாதே-அது
மகத்துவமில்லாத துரோகம்-நீயும்
மக்களைக் கொல்
வேண்டியதைச் செய்
கொலைகளை உனது வீட்டிலிருந்து ஆரம்பி

எனினும்,நீ செய்வது
துரோகந்தாம் ஆனால் அஃது
சிங்கத்தின் துரோகத்தைப் போலன்று
ஏனெனில்
நீ கொலை செய்வதால் புலி
உனக்கான தேவை வேறானது
சிங்கம் பசிமறுத்து வேட்டையாடுவதால் அஃது வேறானது

நீ,பசித்திருப்பதால் புசிக்க
வேட்டையைத் தொடக்குகிறாய்-இது
அடிப்படையில் வேறான அளவுகோலுக்குள் அளக்கப்பட
புரட்சிப் போதனாச் சாலை புகட்டும் துரோகம் இஃது

துணிந்து நில்,
உனது கடைசிச் சகா வீழும்போது-நீ
சைனட்டைக் கையிலெடு
அதுவரையும் உன்னில் தியாகத் தீ எரிகிறது!



உனது கொலைகளுக்கான எனது தீர்ப்பு
துரோகமற்ற தியாகமென்று
நான் மட்டுமே பிரேரிப்பதால்-ஆவது
புரட்சிக்கான புதிய விடியல்

குடிகளுக்குள் வெடியை வைப்பதும்
கூன் விழுந்தவர்களைக்
கட்டாய இராணுவமாக்குவதும்
தியாகத்தைச் செய்வதற்கான தீராத தேசியம்
இது,தமிழுக்கு ஒரு ஈழத்தை அவாவுறுவதே
அதைப் பிரித்தறியும் புரட்சியின் சிறப்பு

தலை வணங்குகிறேன்
உன் துரோகம் மறுத்த தியாகத்துக்காகவும்
பாசிச வாதியாக நீ
இருந்தாலும் உனது புனிதக் கொலைகள்
வரலாற்றில் தியாகத் தீயை மூட்டியே சாம்பலாகும்!

இதனால்
நீயும் தலைவனே!
நீ தியாகி
உனது தியாமெங்கே
சிங்கத்துக்கு வாலாக நீளும்
எச்சில் நாய்களின் துரோகம் எங்கே?

ஆதலால் நாம்
உன் பாதத்தை நக்கி
மோனத்தில் வாழ்வதே
ஈழத்தின் வெற்றி
வாழ்க நீ புலியாக-வாழ்க!

ப.வி.ஸ்ரீரங்கன்
16.04.09

Sonntag, 12. April 2009

வாழும் மனிதர்தம் ஓலம் உரைக்கும்...

கழுவிய மீனும்,
நழுவிய கையும்.



ந்தர்ப்ப வாதம்,ஓடுகாலி,தப்பித்தல்
கழுவிய மீனில் நழுவிய மீனெனவும்
ஊருக்குள் உருண்டுவரும் மொழிகள் பிளந்து
உன்னையும் கற்கச் சொல்கிறாய்,...ம்!

"சரியோ பிழையோ" தெரியாது,
கருத்துச் சொல்வதும் தப்பித்தலும்
சரளமான தமிழ்ச் சேட்டைதாம்
நண்ப போதாதற்குப் புதைகுழி தோண்டி

செத்துப்போன பிணத்தை இழுத்துப்
புலிப் பாசிச மொழியை வெகுஜனவூடக
மொழிவாகக் கருத்தூன்றாதே, தனக்கு
மூக்கு நீளமெனும் ஒரு வாத்து

மீளத் துயர் விலத்தித் தும்முகிறது
இறுதிவரை பிணங்களாகும் உயிருள்ள
வாழ்வாசைகள் துரோகம் மறுத்தத்
தியாகக் கம்பத்தில் கஞ்சல் சேலையாய்

அழகுக் கோலம், வரலாற்று வெளியில்
கொலுவூன்றிக் கொடி நாட்ட!;
நீ,புதியவனாகச் "சரியானது
பிழையானதென" கூறமுடியாது தவிப்பதாகச்


சொல்வதில் எவரையும் காப்பதற்கில்லையே?
முத்திரைகள் பலவிதப்படும் துரோகி,
எட்டப்பர்,பொறுக்கி,நாய்கள்,உணர்ச்சிவசம்,
இத்தனைக்கும் மத்தியில் இவருக்கும்

அவருக்கும் தனிமனிதப் பழிவாங்கல்
பொருந்துவதற்கு அவரவரொடு கூடப் பிறந்திட்ட
"மக்கள் நலன்" விட்டுவிடாது!,
எல்லோர் கழுத்திலையும் துரோக அட்டைகளைத்

தொங்கவிடும் புலிப் பினாமிகளோ தமக்கெனப்
புரட்சி அட்டைகளை தொங்கவிடச் சொல்வதும்
நியாயமென உரைக்க நீ எதற்கு நண்ப?;
மற்றவர்களுக்கும் அழகான தொப்பிகளைத் தைக்கத்

தெரியும் என்பதற்காய் புரட்சிக் குத்தகை
ஏலமாவதில் எனக்கென்னவோ இலட்சம் புதைகுழிகளுக்கும்
தமிழீழம் கிடைத்துவிட்டதென்ற உணர்வொடு
ஊசலாட்டம்தாம்; உப்பிடுவது அதுதானே எமக்கு?

மனித உயிரை நேசிப்பது இருக்கட்டும் நண்ப
தவறைத் தவறெனச் சுட்டப் புலிக்கொடிக்குள் முகத்தைப்
புதைத்துப் புரட்டுவதற்கும் ஒப்பீடுகள் உனக்கெதற்கு?
உலகம் உருண்டைதாம் அதற்காக அது சிறுபிள்ளைப் பந்தா என்ன?

பருப்பு வேக வைப்பதோ அன்றி
ஓடிப்பிடித்து ஓணான் பிடிப்பதோ அல்ல,
நாம், இலட்சம் மக்களது உருண்ட தலைகள்கொண்டு
பந்து விளையாடுகிறோம்; போதாதற்குப் புரட்சிப் பாடலுடன்!

இப்போது,நீ கூறுவதெல்லாம் மனித நேசிப்புக்கானதென்கிறாய்
இதிலாவது நாணயத்தைக்கொண்டாயானால்-அதற்காகவாவது
விசுவாசமாக நடக்கக் கடவாய், அன்றியதையும்
புலிக்குத் தியாகங் கற்பிக்க,ஏகாதிபத்திய எதிர்ப்புக்

கூறெனவுண்டு இருப்பவர்கள் தலைகளையும் கூறுபோட்டு
அறுப்பதற்குப் பெயர் புரட்சி அல்ல!வேசங்களுக்கு மேடை
கொலைக் களத்தில் என்று எவர் சொன்னார்?சாகடிக்கப்படும்
உயிர்கொண்டு சரணாலாயம் கட்ட நீ எதற்கு?

பிழை சரியெனத் தெரியாது தவிக்கிறாய்,
விரைவில் கற்பதற்கும் காலத்தில் வாழு
மீதியை வாழும் மனிதர்தம் ஓலம் உரைக்கும்
உனக்கும் எனக்கும் பாலங்கள் அமைத்து.

ப.வி.ஸ்ரீரங்கன்
12.04.09

Freitag, 10. April 2009

புதை குழிகள் குறித்துப் பாடம்

தமிழீழமும்,
துரோகமும்!



தொப்பி அளவானதாக இருக்கலாம்
அதற்காக முள்முடியைத் தரித்து
அழகு பாப்பவர்கள் தமது செயலை
மற்றவர்கள் தவறெனச் சுட்ட முடியுமா?


ஆரம்பமே துரோகம்
இதுள் புதிதாகவும் துரோமெனப் புடுங்க
புரட்சிக்கான எந்தப் புண்ணாக்கு
புலிகள் போராட்டத்தில் உண்டு?


ஒன்றும் இல்லை,
எல்லோரும் அந்த வெள்ளத்தில்
அள்ளுப்பட உனக்கான வாழ்வு
அநாதையாக மயானம் நோக்கி




இடை வழியில் குவளை ஏந்த
சமாதிகளுக்குப் பின்னால் ஒளிந்தபடி
மேலும் புதை குழிகள் குறித்துப் பாடம்
நடாத்துகிறது புரட்சிக் கோஷ்டி


நீ,கருவினிலேயே குறைப்பட்டுள்ளாய்
அறிந்தவர்கள் உனது தாயினது கற்பத்தில்
உன்னைக் குறித்துப் பேசியதெல்லாம்
தாய்க்கு ஒரு பிள்ளையே ஒழிய


உனது எதிர்காலம் குறித்து அல்ல
நிலாக் காலத்தை நீ தரிசிக்க
விழி உனக்கு இடந்தராதவொரு
அகண்ட விகாரத்தால் நீ மண் தடவிக்


கோலமிட்ட முற்றத்தை அழித்தெறியும்போது
நீ பொறுப்பில்லைதான் கேடு விளைவித்தவர்கள்
உனது முற்றத்தில் கோலம் போடுவதற்கு முன்
உன்னைக் குறித்துச் சிந்தித்து இருக்க


அவர்களது ஆசை இடங்கொடுக்கவில்லை
நீ,கும்மிருட்டில் உலகத்தைத் தரிசிக்கிறாய்
உனது மனமோ உறை பனி வலயத்தின்
கரடியாக அலையவில்லை உன்னை ஈன்றவர்கள்


அங்ஙனம் இருக்கக் கடவரென நீ
உரைப்பதுமட்டும் அவர்களுக்கு எங்ஙனம் கேட்கும்?
அவர்கள் உன்னைக் குறித்தே விசாரனை செய்யாது
தம்மைக் குறித்த உலக அளவுகோலை


நிறுவுவதில் காலத்தைக் கொலை செய்தனர்
உன்னைக் குறைப் பிரசவமாக்குவதற்கு முன்
அட்டைக் கத்தி கொண்ட சேனைகளோடு
கோட்டையைப் பிடிப்பதற்குக் கோவணம் கட்டி


கடல் கடந்து கரச் சேவையில் ஈடுபடலாயினர்
இருப்பதையும் பறித்தவர்கள் உனது சத்திரச் சிகிச்சைக்காக
பொன்னள்ளிக் கொடுத்தபோது அதில் தமது சுமைகளை
உனது முதுகினில் ஏற்ற நீ முதுகெலும்பைத் தானமாக்க நேர்ந்தது





எகலைவன் துரோணருக்காகக் கட்டைவிரலைக்
காணிக்கை செய்தபோது குருபக்தியே அவனுக்கு அதிகமானதாகச்
சொன்னவர்கள் அவனது ஆயுளைப் பறிக்க அவிட்ட
அதே கதையோடு உன்னையும் இன்று காவு கொள்கின்றனர்


உன்னைப் பெற்றவர்கள் உலகைக் கடந்து
ஏதோவொரு சந்தியில் சில்லறை பொறுக்க
இன்னும் குறைப் பிரசவங்களுக்கான கருக்களை
சுமப்பதற்கான விந்துக்களை அந்நியர்களின்


ஆண்மைக்குள் ஒப்பந்தஞ் செய்ய
அதையும் உனது அநுபவத்தைக் கடந்து
இன்றைய துரோகங் குறித்தக் கேள்வி
ஆரம்பமே துரோகமெனும்போது


புதிதாகவும் துரோகம் நீ கற்பனைக்குள்
உந்தித் தள்ளுவதும் புரட்சியென அவிழ்ப்பதும்
குறைப் பிரசவத்தின் கோலந்தன் அழிவை
கோட்பாட்டில் அச்செடுப்பதற்கான முயற்சிதாம்!


ஒன்றும் இல்லை,
எல்லோரும் அந்த வெள்ளத்தில்
அள்ளுப்பட உனக்கான வாழ்வு
அநாதையாக மயானம் நோக்கி...



ப.வி.ஸ்ரீரங்கன்
10.04.09

Mittwoch, 8. April 2009

புலித் தளபதி தீபன்!

உனது இதழில்
மொழியில்லை!


நீ, அடுக்கடுக்காக
வெற்றிகள் குவித்தபோது,
வண்ண வண்ணப் படங்கள் போட்டுப் பரப்புரை.
தமிழீழம் உனது மிடுக்கில்
கொலுவுற்றதாகவும் பலர் நம்பிக் கிடந்தனர் அன்று!

அந்தோ பரிதாபம்!



நீ, உயிரிழந்து
மல்லாந்து கிடக்கும் மண்ணைத் தவிர
இன்று,
உன்னைத் தொட்டுப் பார்க்கக்கூடத்
தமிழரால் முடியவில்லை!

உனது நாமத்தை
உச்சரிக்கக்கூட ஒருவனில்லை,
உப்பில்லாத ஊர் இது!

உயிரோடிருக்கும்போது
உன்னை,
உருபெருக்கக் காட்டிய ஊடகங்களுக்கு
உனது
மரணத்தைச் சொல்லவும் துப்பில்லை.

தூ...

சதிகாரக் கூட்டமே!

நீ, கொலைக் காரன்,
கொடுமையானவன்,
மக்களை வதைக்கத்
"துரோகி"
என்ற ஆயுதத்தோடு அலைந்தவன்!

எனினும்,
சிங்களக் காடையர் இராணுவத்தால்
அடிமைப்பட்ட நாம்
உனது மிடுக்கில் பெருமிதங்கொண்ட காலமொன்று
விழிமுன் தோன்றிச் சொரிகிறது நீராக!!

புரிகிறது!

இயக்கத்தினது நலனுக்காக
எவரையும் கொல்லும்
அந்தக் கொடுமையான தமிழ்மனது
கொல்லப்பட்டவர் குறித்துச் சொல்லாதுதாம்!

துன்பத்தில்,
பங்குகொள்ளாப் பணவேட்டைக்காரர்கள்
பாடையா கட்டுவார்கள்?

மக்களுக்குச் சொல்வதற்குக் கூட
உனது மரணம் விரோதமானதா?

அறியாத நேரத்தில்,
புரியாத களமொன்றில்,
சரிந்ததோ உனதுடல்?

உயிர் துறந்த
அந்தக் கணங்கள்
துரோகிகளென நீ
பலியெடுத்தவர்களது
கணத்துக்கு ஒத்ததாகவா உணர்ந்தாய்?

எத்தனையோ பொழுதுகளில்,
உனது
மிடுக்கை ஏலம் போட்டவர்கள்
தமிழீழத் தேசிய உறக்கத்தில்
உன்னை மறந்திட
துரோகத் தலைமைக்கு
சிரங்கொடுத்த உனது நிலை வீரமா
அல்லது
கோழைத்தனமா?

நினைவுக்காகக்
குறிப்பு எழுதுகிறேன்
அவ்வளவுதாம்!

காலம்,
எப்போதாவது
உன் மரணத்துக்கான தீர்ப்பைச் சொல்லும்.


அதுவரையும்,
உனது
மிடுக்குத் தமிழர்களது
தவித்த மனதுக்கும்,
சிங்களத்துக்
காட்டுமிராண்டி இராணுவ அச்சத்துக்குமான
ஒரு வடிகாலகவே இருந்திருக்கிறது என்றுரைப்பதில்
நான்
எதையும் இழக்கப்போவதில்லை!

நீ,கொடியவனாகவும்,
பாசிச வாதியாகவும் மாறினாய்.
மக்கள் படைத் தளபதியென
உன்னை எங்ஙனம் உரைப்பேன்?

எனினும்,
அமைதிகொள்!
அழிந்து விட்டாய்,
அற்ப அழிவு அரசியலில்
உன் மரணத்தின் தடமே மறைக்கப்பட்டுள்ளது!

மௌனித்த
உனது இதழில் மொழியில்லை,
நீ,
இப்போது தமிழனும் இல்லை,
சிங்களவனும் இல்லை-மனிதன்!

செயலால் இனங்காணும்
உனது உடலுக்குக் "கொலைக்காரன்" எனும் வரலாறு
மனதினது ஏதோவொரு உணர்வுத் தடத்தில்
குறிப்பெடுத்து நெஞ்சைக் கல்லாக்கிறது!


என்றபோதும்,
விழி பனிக்கிறது.



ப.வி.ஸ்ரீரங்கன்
09.04.2009
பின்னிரவு:01:11 மணி

Sonntag, 5. April 2009

இனியொரு பொழுதில்.

வன்னிக் காண்டம்.

சிறு பொறிதெனினும் விட்டுவிடாதே
உன்னைச் சுற்றியே உலகம் உருண்டு
உப்புக்காக அமிழ்ந்து போகிறது
ஊசி முனைக்குத் துளைபோட்டதுகூட

இன்றைய மாற்று முனைதாம்
எவரறிவார்
இதற்கென் பெயர் கொல்?
அர்த்தங்கொள் கணமென?

நாட் கணக்கெனவும்
மாதக் கணக்கெனவும்
கண்ணீரைச் சிந்தவொரு கூட்டம் வன்னிக்குள் அன்று
இன்றோ குருதியால் நிலம் மெழுகும் பொழுதைத்தானும்
மறுத்தொதுக்குங் கண்ணீர் மறுத்தொதுக்கத்
தேசம் ஒரு பொருட்டாய் உனக்கு!

என்ன மனிதன் நீ?
புலிக்கொரு காவடி
புறத்திலொரு புருடா
இதற்குள் சுண்ணாம்பு தடவுவதில்
நாவைச் சிதறடிக்கிறாய்!

நீரற்ற மட் குடத்தை
முன்னிருந்து பின்னுக்கும்
பின்னிருந்து முன்னுக்கும் தள்ளு புரட்சியெனவும்
சுயநிர்ணயமெனவும் கூடவே தமிழீத்துக்காகத்
தேசபக்தர்களுக்குச் சமாதிகட்டி!

மரக் கிளையில்
தமிழீழத்தின் தேசியக் கொடியில் ஏணைகட்டியபடி
குற்றுயிராக் கிடக்கும் மழலையைப்
பறிகொடு ஈழத்தின் பெயரால்
தலைவர்களது கொம்பு சீவிக்
கடைவிரிப்பவன் காசுக்காகச் சுத்தும்போது
உனது மழலை பிணமென வீழ்கிறதா?


பயப்படாதே!
உண்மை எந்த ரூபத்திலும் வரும்
அது,
உன் மழலையைப்
புசித்து உன்னிடம் வருகிறது

மக்கள் நலன்
வழிநெடுக மத்தாப்பு வீசுகிறதாம்
எஞ்சிய மகனைத் தயார் படுத்து
இன்னொரு சுயநிர்ணயப் போருக்கு!

சாவுதானே,
அது,எனது பிள்ளைகளை நாடாதவரை
உனது பிள்ளை சாவது
தமிழர்களின் அடிமைத் தளையறுக்கவே
முடிந்தால்,
முலைகொடுத்தவளையும் சேர்த்தே அனுப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தில்
ஒத்த தமிழன் செத்துத் தேசம் காக்க

இனியொரு பொழுதில்,
கச்சை கழட்டுவதற்கு முன்னமே
கண்ணீர் குறித்து அறிந்துவிடு!

சாவு வியாபாரிகள் பல ரூபத்தில்
அடுத்த கருவைக் கற்பத்திலேயே கருவறுக்க
ஐரோப்பியத் தெருவில் புலிகொடிக்கு முத்தமிடுவதில்
உன்னைக் குறித்துக் கிஞ்சித்தும்
கவலைகொள்ளாக் கண்ணீரோடு...

தேசியத் தலைவருக்குப் பூசை எடுத்தபடி
தழிழரின் தாகம் தமிழீழமெனக் கொக்கரிக்க ஒரு கூட்டம்
வணங்கா மண் பெயரில்
கப்பலிட்டுச் சாவுக்கென சங்கூதும்!;
இதையும் மறந்திடாதே!

ப.வி.ஸ்ரீரங்கன்
05.04.09