Posts mit dem Label பிடரியில் தட்டும் காமத்து மோகம் werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label பிடரியில் தட்டும் காமத்து மோகம் werden angezeigt. Alle Posts anzeigen

Samstag, 24. Januar 2009

வித்தகஞ் செய்தும் வினை செய்தும்

கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்!

கூட்டி நிற்போனும் கொடுத்து நிற்பாளும்
சாத்தி நிற்கும் சடுதியுள் உறையும்
குருதியுங் குடையுங் கொடுமையும் அறியா
குப்புற வீழ்ந்து குழி தேடிய போதை
மெல்லச் சுரக்கும் மோவாய் ஏந்தும்


தேறாத தனையன் தெம்பு தேடித்
தெருவெல்லாம் அலைந்து தேகச் சுவையுள்
கூத்தாடிக் களைத்து
மோதலுங் காதலுங் கடந்துபோனவொரு திசையில்
மாற்றமொன்று மௌனத் திரையில்
மகிழ்ச்சியாய் இருப்பது மனதில் வெருட்சியாய்...


கண்ணும் தெரியா ஒரு மண்ணும் புரியா
உள் நின்று அவிக்கும் உயிரை உருக்கும்
காமத் தலையுள் சாதல் வலுக்கும்
சறுக்கும் தரணங்கள் தாள்களைக் கொல்லும்


நொருங்கிய உடலும் சிதறிய மனமும்
செருப்பால் அடிக்கும் மூளையுள் உறைய
பேதமைகொண்ட போதைப் பொருளாய்
தொப்புள் தொடையுள் உதிரும் விழிகள்
அறுவகை வழக்கும் அழிந்து விலகும்



எத்தனையுடலும் என்னைத் தொலைக்கா
ஏந்திய வேட்கையும் எரிந்து போகா
இழப்பதும் சிதைவதும் சேர்ந்தே வர வர
சிறுமைப் பொழுதாய்க் கணங்கள் தொலைய
பித்தம் தலையைச் சுழற்றிக் கழற்றி
பிடரியில் தட்டும் காமத்து மோகம்


துக்கம் தொலையத் தெருவெல்லாம் புலம்பி
தக்க பொழுதில் தான் அழியாதிருக்க
தகமை சொல்லி தேற்றும் தோறணம் அறுந்து வீழ
அற்ப பொழுதில் அவளைப் புரட்ட
அங்கே இங்கே அலையுங் கால்கள் எனது!


வித்தகஞ் செய்தும் வினை செய்தும்
வியப்பிலாழ்த்தும் ஈய்தலும் செய்தும்
விருப்பப் பெண்டிர் மார்பினுள் மேயும்
மடமையுங் கொண்டேன்


குடையுங் கொடுமை கோவணம் கழற்றும்
கள்ளவுறவில் மெல்லத் தொலையுந் தொகையும்
ஊனையுருக்கும் ஒரு நொடி கலைய
உருவச் சிறப்பு உடனே தேடும் இன்னும் ஒன்றை


எத்துணை உதிர் மேகப் பொழி துளி
எதிரில் அறுந்துதிரும் அற்ப மரத்து இலை
எல்லாம் தொலைய அழிந்து வரும் காலம்
இத்தனையுங் கடந்தது காமத்து நிலைபடி


"பெண்ணின் ஆகிய பேர்அஞர் ப+மியுள்
எண்ணம் மிக்கவர் எண்ணினும் எண்ணிலார்
பின்னி நின்ற பெருவினை மேல்வரும்
என்ன தாயினும் ஏதில்பெண் நீக்குமின்"

எப்படி ஐயா?

எடுத்தாடிடும் கூத்து நிறைவுறா
நெஞ்சத்துள் சேறு
நேற்றைய பொழுதும் நெருப்பிற்றொலைக.


ப.வி.ஸ்ரீரங்கன்
29.05.2007
நள்ளிரவு மணி:00.23