Posts mit dem Label எந்தக் கனவைக் காண நேரிடினும் werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label எந்தக் கனவைக் காண நேரிடினும் werden angezeigt. Alle Posts anzeigen

Samstag, 24. Januar 2009

பாழ்பட்ட நாட்டில்

ஓடும்
போர்க் குதிரைகள்!


போர்க் குதிரைகள் தாறுமாறாக ஓடுகின்றன.

குதிரைகளின் கால்களில் அழகான இலாடன்கள் அடிக்கப்பட்டும்
அவைகளில்"பேச்சு வார்த்தை-சமாதானம்"என்றும் அழகாகப் பொறிக்கப் பட்டும்
தேவையேற்படின் மூன்றாம் தரப்பின் அனுசாரணையோடு
கட்டுக்கு வருமென்றும்"அரசியல் சாஸ்த்திரிகள்"மீளவும் கூறுகிறார்கள்!


முன்பும் இதே கதையாய்...


மக்களும் நம்பிக் கொண்டு
நடுகாட்டில் வெட்டிய மரத்தடிகளில் மறைப்புக்கட்டி
மண்கிண்டி
வயிறு நிறைத்திட்ட கணப் பொழுதில்
போர்க்குதிரைகள் கட்டவிழ்த்துப் பயிரழிக்கின்றன.


பாழ்பட்ட நாட்டில்
போருக்குக் குதிரைகளைத் தயாரித்த
சொல்லாத "தர்மங்கள்"பல இப்போதும் மறைப்பில்
சொல்லித் தெரிந்தவைகளையும்
சில செத்த குதிரைகளின் குருதி நெடிலில் மக்கள் மறந்தே போகிறார்கள்!


எந்த நேரத்தில்
எவர் தலையிலும் நெருப்பைக் கொட்டும் சிங்களக் கனவுக்கு
சீவிச் சிங்காரித்து"படைத் தரப்புக்கு"இது பின்னடைவல்ல என்றும்
புள்ளி விவரப்படி ஆட்டொகை காட்டி
கடைந்தேற்றும் கடையர்களும் கண்ணீர் சிந்தி
நம் தலையில் குட்டுவதும்
காலைக் கடன்போல் தினமும் தொடர் நிகழ்வாய்த் தெருக்களில் சிந்தியபடி


எந்தக் கனவைக் காண நேரிடினும்
அவை குருதிகொட்டும் சிதறிய சதைப் பிண்டத்தோடு
சொல்லும் சேதிகள் தூக்கத்தைக் கெடுத்த அதே பொழுதுகளாய்
தமிழர்களின் முற்றத்தில் வந்துறுமும் பருவக்காற்று
பாடைகட்டியே வெறுத்துப்போன கரங்களோடு
நமது பெரிசுகள் பல்லைக் கடிப்பது தினமும் தொடர்ந்தபடி


எத்தனை நாளைக்குத்தாம் இது வாழ்வாய்?


வட்டமேசையிலிருந்து
திம்புபோய் பின்பு
நோர்வே தாய்லாந்து
சுவிஸ்சர்லாந்து என்று தீர்வுதாம்
கட்டாக்காலி எருமையாக அலைகிறது இந்தத் தேசங்களில்


செம்பு நீரில் வயிறு நிறைத்தவர்களும்
செத்துக் கிடப்பதற்கே
செல்லடி பட்டுக்கொள்வதும்
சொல்லாத அந்தத்"தர்மங்களால்"தாம்!
அதையும் காத்துக் கிடக்கும்
சொத்துக் கூட்டம் சொல்லும் கதைகளும்
போடும்"தர்மங்களும்"இந்தத் தேசத்தில் நிரந்தரமாய்ப்
போர்க் குதிரைகளை ஓடவிட்டபடி...

ப.வி.ஸ்ரீரங்கன்
15.10.2006