Posts mit dem Label என்றோ அறுபட்ட தொப்புள் கொடி werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label என்றோ அறுபட்ட தொப்புள் கொடி werden angezeigt. Alle Posts anzeigen

Samstag, 24. Januar 2009

நெஞ்சத்து மூலையில் மோதியபடி...

தொப்புள் கொடி


கனவுகளின் எச்சமாக
சோகம் கப்பிய மங்கலான
நினைவுகளினது நிழல்கள்
தேகமெங்கும் தன் இருள் படர்ந்த விரல்களைப் பரப்பியபடி

அன்னை!
அடுப்பினில் புகையும் தென்னம் பாளையும் ,
அதனருகினில் வேகும் அந்த அற்புத உயிரும்
மப்புக் கரைந்த மந்தாரமாய்

வெறுமையின் நீண்ட கரங்கள் பிடரியைத் தடவ
உணர்வினது சூனிய வெளியில் அந்தரத்தில் தொங்கும் அன்னை,
நொண்டிக்காகமும் சொண்டுக்கிளியும்
நொந்து போக வைக்கும் நெருங்கிய தோழமையின் இழப்பாய்
நெஞ்சத்து மூலையில் மோதியபடி

கனவுகளைக் கருக்கிய பனிக்காலக் காற்றின் ஓலம்
கற்சுவரின் மோறையில் அறைந்து காலத்தில் அமிழ்ந்தது
எழுந்து சென்று பார்த்திட கால்களை அசைக்க
முதுகினது பின்புறமிருந்து மோதிய அதிகாரத் திமிர் இரும்புச் சுவராய்

நேரம் நெருங்குகிறது!
ஒர கால அவகாசம் கோவணம் கழன்ற கதையாக
மோப்பம் கொண்ட வெறி நாயோ வெல்வதற்குத் தயாராகும்
கோபுரத்து உச்சியில் தவமிருந்த கொக்கு பறப்பதற்கு இறக்கை விரிக்கும்

இங்கு காத்துக்கிடக்குமிந்த நடை பிணம்
கஞ்சல் பொறுக்கியபடி
அன்னையின் மடியும் அவித்துண்ணும் பனங்கிழங்கும்
அற்புதமான நிகழ்வாகிப் போச்சு!

தெருவோர வேப்பமரமும் வைரவ சூலமும்
முற்றத்து முல்லையும் பனையும்
முந்திய காலது;துச் சுவடாய்
கருச்சுமந்த அந்தக் காதலி கால் நீட்டிட
துணியினால் பிணை படும் அவள் விரல்கள்

என் முனகலில் கிழிபடக் காத்துக்கிடக்கும்
எனக்கு நரையேற்றும் காலமோ தன் கொடுங் கரம் கொண்டு
ஓங்கி உச்சியில் குத்த ஒப்பாரியாய் விரியும்
குடும்ப அகழியும் ஆழப் புதைக்கும் அன்னை மீதான பரதவிப்பை


என்றோ அறுபட்ட தொப்புள் கொடி
இதுவரை ஆறுதலளித்த ஆத்தை
இருண்டுவிடப் போகுமிந்த யுகம்
விழி நீரின் வெடிப்பில் அமுங்கும்.