Posts mit dem Label நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி werden angezeigt. Alle Posts anzeigen

Samstag, 24. Januar 2009

விடுதலை அகவல்

விடுதலை அகவல்

(நேரிசை வெண்பா)

நெற்றிப் பொட்டில் மஞ்சள் கட்டி
நெரிப்பிலிட்டு நீறாக்கி
நேற்று வைத்த நேற்றிக்கடன்
நெஞ்சுக்குள்ளே நினைவகற்றி

நெருப்பாய் போனது தெருவோரம்
ஊரானாலும் அழிந்து தேசம் பிறக்க
தேற்றிய கதைகள் நேற்றுவரை
பொய்மை விழுங்கிப் புடம் போட

போனது,போனது உயிருயிராய்
போற்றும் தலையும் தரைகிழித்துச் சுழியோட
புகழும் தளபதி படைவிலத்த
பழிக்கு நிற்கும் பிஞ்சுகளின்

உயிரினைப் பறிக்கும் சிங்களமும்
நாளும் சரியும் தலைகொண்டு
நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி
போரிடும் தாய்மண் என்றாக

சீண்டிப் பார்க்கும் சிறுகூட்டம்
சேனை கொண்டு அறுவடைக்குப் போனோர்
ஆண்டுகள் கண்டும் நாடடையார்
விடிந்தும் வீடுவரா வேளாண்மை

வேறு:

குருதி மழை
கோலமிழந்த ஈழ முற்றம்
நெடும்போர்ப் புயற் பொழுது
நெற்கதிர் தலை வீழ்த்திய குருதி வெள்ளம்

கடும் பசி கண்டகம் சுடலைக் கோலம்
வீடுடை குருதியுறை பிணம்
காடுடையான பிஞ்சுகள்
கேடுடையானார் ஈழத்தவர்

மேடுடையான மேன் மக்கள்
மேகத்துள் சொர்க்கம் காட்டிக்
கண் பறித்துச் சித்திரம் காட்ட
'அழகென்ன அழகு' என்பர் ஈழத்தவர்!

வேறொடு வேறு:

அதுவல்லத் தேசம் இதுவல்லத் தேசம்
ஆண்ட பரம்பரை மீள ஆளுந் தேசம்
தமிழீழ மது தாயினும் மேல்
தமிழெமது உயிரென்பாய்

தாகமும் அதுவே என்பாய்
தாயினது உடலம் வீழ்ந்தது
தந்தையும் வீதியில் வீழ்ந்தான் என்றோ
தனயர்களும் தாங்கிய போராயுதம் சரியத்

தலை சாய்ந்தார் கிழக்கொடு வடக்கிலும்
மடிப்பிச்சை எடுப்பேன் இறையே
இனியிவர்க்கு மாவீரர் வாழ் மண்ணும் வேண்டாம்
மக்களைத் துடைக்கும் கோனும் வேண்டாம்

கோவணம் இல்லை
குடியிருக்க ஊரும் இல்லை
கோயிலும் இல்லைக் குளமும் இல்லை
சுருங்கிய இரைப்பைக்கு ஈழம் எதுவரை?

புலிவழி கோன் முறை அரசு என்பாய்
குறைவில்லாத ஈழம் என்பாய்
ஒருவர் இருக்கும்வரை ஓங்கும் போரென்பாய்
அவரும் அழிய ஆவது என்ன என்பேன்?

வேறிலும் வேறு:

மகிந்தா மனிதர் என்றும்
தமிழருக்கு மேய்ப்பன் என்றும்
மகிழ்ச்சியாய் ஏற்பாய் எலும்பை
அதையும் புனைவாய் விடுதலை என்று

நெடுங்குருதி சொல்வாய்
நினைவையும் நெருங்குவாய்
நேற்றையதில் தமிழ்த் தலைமைiயுயும் காண்பாய்
அழிபவரை மறந்த மனதொடு அழிந்தவர் பற்றி

அவரவருக்கு ஆள்வது அவசியம்
குறிச்சி,வட்டாரம்,கோட்டம்
மாவட்டம்,மாகாணம்,மாநிலம் என்ப
மண்ணுக்கு எல்லைகள் வகுப்பாய்

கிழக்கொடு "ஜனநாயகம்" குந்த
கூலிக்குக் கும்பம் வைப்பாய்
குடியிருக்கப் பாரீஸ்சில் பங்களா கேட்டாய்
கொடுத்தவர் கொள்கை வீரர் கருணா-மகிந்தா மாமா


வேறிலும் வேறான வேறு:

வா வேந்தே வா,நீ "ம்..."கொட்டியவன்!
மார்க்சைக் கூட்டிவா மகுடி வாசிப்பார்
ராகவனை அணைத்துக்கொள் கூத்தடி,கதையாய்ப் புனைகொள்
ஏடாக்கு, நேற்றுக் கோட்டையைப் பிடித்தவர் நாம்

பேட்டையைக் கட்டுவதா சிரமம்?
நீ இருக்க எனக்கேது கவலை!
நினைத்தபடி இரு கல்வெட்டொன்று இனியும் வேண்டாமென
நேற்றைய நீயும் நாளைய நானும் என்றாய் உலகம்

பெண்ணியமா வேந்தே?நீலி,அந்தரி
செங்கண் அரவு பிறையுடன் பிணைந்த
ராஜேஸ் அக்கா இரவகற்றும் புரட்சி மடந்தை
நிர்மலமும் நீறாய் நெற்றியில் பூசு

வல்லவன் நீ
கொல்பவர்களைச் சொல்லியே
கோலம்போடு உலகமெங்கும்
கூப்பாடுகொள் பின் நவீனமாக

குடியிருப்புகளுக்குள் கலைத்தல்
அமைப்பைக் குலைத்தலுக்கு அவசியம்
குந்தியிருக்கும் இடத்திலிருந்து ஆரம்பி
அடுப்படிக்குள் சாம்பலையும் வையாதே!

தலித்துப்பாட்டு மடை:

தண்ணிமுதல் தெரிவை தாகங்கொண்டு
மதிப்புக்கு மறுப்பறிக்கை பகர்க
குடிமனை உழந்த மாதரை நோக்கி
"உடலுறவில் திருப்தி"பற்றிக் கேட்டுவை

கடுமனது கொண்டால் சிரித்துவிடு
கனிவொடு மௌனித்தால் மடக்கு
இரவொடு தலித்துவம் பேசி வை
உனக்கா இது சொல்ல?

இடிதரும் வெடியும் நீ
கடி தரும் கொங்கைப் பாலும் நீ கேட்பாய்
குடமொடு பொழியும் மடந்தை
குழைவினில் குளிர்பவன் என்ப

குருவே,கோசுகனார் கொம்பே!
"வேளாளன் சாதி நீக்கிப் பிரகடனஞ் செய்க"வென
தலித்துவத்தின் விளக்க வரிவுரையே
மலர்பொதி அவிழ்த்த மாண்பே நினது பெருமை சொல்ல?

நெடுங்குருதி மருவி
விரிவிடை செரிவு காண
அருவிய செழு நீர்க் கமலத்துள்
நீந்தப் பெருந்தவப் பயன்கொள்-இதுவே தலித்தியம்


நிறை:

தெரிநிலை தேற்ற மையமுற் றெண் சிறப்
பெதிர்மறை யெச்சம் வினாவிழை வொழியிசை
பிரிப்புக் கழிவாக்க மின்னன விடைப்பொருள்.



01.08.2008