Posts mit dem Label சுயநிர்ணயம் werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label சுயநிர்ணயம் werden angezeigt. Alle Posts anzeigen

Samstag, 24. Januar 2009

கொல்பவர்களைக் காட்டு நீ

தெருமுனைகளும்
தேசத்தை ஏலம் போடும்

கொல்பவர்களைக் காட்டு நீ
கொல்லப்படுபவர்களையும் காட்டு
ஏன் கொன்றார்கள் என்றே கேட்டு வைப்போம்
உண்மைகளை இருவரும்தவிர மூன்றாம் நபரெவரும் அறியார்

நீ "ஈழவிடுதலை" என்கிறாயே அது என்வென்றுரைக்க முடியுமா?
மோதிய சுவரில் வழிந்தோடும் குருதியில் பட்டுவிலகும் தென்றல்
நாசித்துவராத்தோடு குருதிவெடில் சுமந்து
எனது உயிர்ப்புக்கு உப்பிடுகிறது

எனக்குள்ளும் இறந்தவர்கள்
கொன்றவர்களுக்குள்ளும்
கொலைகளை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்கள்
தேசத்தினது விடுதலையை மையப்படுத்தும் துப்பாக்கிவழி

எனக்கிருக்கும் உயிர்த்திருக்கும் உரிமை
எந்தத் தேசமும் தந்ததில்லை
அதைத் தருவதற்கு எவருக்கு உயிருரிமையாக்கப்பட்டது?
ஒட்டிய உடலொடு கஞ்சல்படும் உயிர் மொழியின் உரிமைக்கு உருமாகிறது

மொழியோ எனக்குள் இருப்பிழக்கிறது
அஞ்சல்படுத்தப்படும் மனித அழிப்புக்கு
உலகத்தின் பலபாகத்திலும் நியாயவோலை எழுதப்படுகிறது
மக்களின் நலனென்று கொலைகள் தீவிரமாக நடாத்தப்பட்ட

தெருமுனைகளும் தேசத்தை ஏலம் போடும் பொங்கு தமிழென
சாவதற்காய் உயிர்த்திருக்கும் அனைவரையும்போலவே
எனக்கும் உயிர் நிலைத்திருக்கு
எழுப்பப்படும் உயிரின் முனகலில் மரண வலி

கொலைகளின் தீவிரம் எதற்காக?
மரணம் நிச்சியப்படுத்தப்பட்ட பலிப்பீடத்துக்கு முன்னே
துப்பாக்கிகள் பிராத்தனை செய்கின்றன
தோத்திரம் உரைக்கும் எனது எஜமானர்கள் கைகளில் ஏசுவின் குருதி

கண்டடையப்படும் நியாயத்தின் வழி
விடுதலை எனக்குச் சாத்தியம் என்பவர்கள்
என்னைத் துரோகியென என்றோ கொன்றழித்தனர்
இதையும் விடுதலையின் நீதி என்கின்றனர்!

வாழ ஆசைப்படும் மெல்லிய விருப்புக்குத்
தேசத்தின் பெயரால் தியாகம்-வித்துடல் முன் நிறுத்தப்பட்டபின்
மரணங்கள் வழிபாட்டுக்கான தரிப்பிடங்களாகின்றன
கொலைகள் "ஈழப்போர்" எதிர் கருத்துக்குத் தீர்வாகிறது

போர் வாழ்வு புகழுடம்பின் புனிதமாகின தேசத்தில்
கொல்லப்படும் உயிர் கடைப்பொழுதிலும் வாழ்வுக்காக ஏங்கித்தொலைகிறது
அதையும் தேசவிடுதலைத் தியாகமென்று
உலகத் திண்ணைகளில் தேசியக் கொடியேற்றுகிறது பாசிசம்

கொல்லப்படுவதற்கு முன் கல்லறையின் முன்னே
கனத்த மனதுடன் குழந்தைகள் அணிவகுத்தபடி
வாழ்வுக்காய் ஏங்கிக்கிடக்கச் சில காட்டுமிராண்டிகள்
தமது கட்டளையைச் சுமக்கும்படி துப்பாக்கியால் சத்தியம் வேண்டுகிறார்கள்

கொல்பவர்களைக் காட்டு நீ
கொல்லப்படுபவர்களையும் காட்டு
ஏன் கொன்றார்கள் என்றே கேட்டு வைப்போம்
உண்மைகளை இருவரும்தவிர மூன்றாம் நபரெவரும் அறியார்

ஈழம் விடுதலையாவதற்குள் குருதிச் சேற்றில் அமிழ
தமிழ்க் குறுந்தேசியம் என்னையும் உன்னையும் அண்மிக்கும்
ஈற்றில் இருவருக்கும் வேறு கல்லறைகள்
"துரோகி-தியாகி"என்று குருதியல் எழுதியும் வைக்கப்படும்

விடுதலை, சுதந்திரம், சுயநிர்ணயம்,தமிழீழம்
ஏகப் பிரதிநிதிகளின் வழியே பொங்கு தமிழாகப்பொங்க
கல்லாப் பெட்டிகள் நிரம்பும் தேசிய வர்த்தகத்தில் பணமாக
இல்லாத ஈழமோ பிணத்தால் நிரம்பி வழிய



21.06.2008

மாவீரர்


ஈழப்போருக்கு
"மாவீரர்"தயாரித்தல்!



காதற் தியானிப்புத் தேவையில்லை
கள்ள விழிப்பார்வையும்
கடிதவரைவும்
கண்விழித்திருப்புந் தேவையில்லை.



மனதுக்குள் கும்மியடிக்கும்
விமானமொன்று குடற் சுவரில் முட்டிமோதிப் பறக்கும்
அம்மாவை வெறுத்தொதுக்கும்
அப்பனை வெட்டிப் புதைக்கும்
"எந்தவுணர்வுக்கும்" அவசியமில்லை!



அவனுக்காய்-அவளுக்காய் "காயும்"காலங்கள்
வெட்டெனச் சாய்ந்து மேலெழும்
தலைக் கோலமும் தேவையில்லை!



மேனிமுகரும் ஆசையோ இல்லைப் பட்டகர்த்தி
பாய்விரிக்கும் அவசரமும்
பள்ளமும் புட்டியுமாகப் படாதபாடாய்ப் படுத்திய
முத்தக் கனவுக்கும் முயற்சி தேவையில்லை


பக்குவமாய்க் களிப்பதற்கு
பால் பழம் புசிப்பதற்கு
மாலை வரத் தேவையில்லை.


மாசம் சுமப்பதற்கு
மசக்கையுணர்வதற்கு
மாங்காய் கடித்திடுவதற்கு
சாம்பல் உருசித்திடுவதற்கு
சிரமப்படத் தோன்றாது!


யோனி கிழிந்திடவோ
குருதி கொட்டிடவோ முக்கி மலமிருந்து
"ஈன்று சாகும்" பிரசவப் பொழுதை
"சுகப் பிரசவம்"என
அஞ்சல் செய்யும் கணவனுந் தேவையில்லை.


தொட்டிலிடவோ
தோளில் சுமந்திடவோ
தாலாட்டுப் பாடிடவோ
தாயாகித் தந்தையாகி மோந்திடவோ


கால்பிடித்து
மூக்கிழுத்து
முழு நிலாவாய் தலைவருவதற்கு
உருட்டிப் பிசைவதற்கோ
எண்ணை தேய்த்து"கற்கண்டு-கருப்பட்டி"க் கதைகளெல்லாம்
கடுகளவும் தேவையில்லை!


நாத்திட்டிக்குக்"கரும் பொட்டும்"காச்சியிறக்கப்
பாட்டிக்கோ,
"உஞ்சு கடிக்கும்-மீயா எலி பிடிக்கும்"
கதைவிடப் பாட்டனுக்கோ தொடருறவாய் நீள்வதற்கும்
உறவெதுவும் தேவையில்லை.


சொத்துச் சேர்த்திடவோ
சோறூட்டச் "செவ்விதிழ்"தாய்மைக்கும்
சுகமில்லை என்றவுடன் காற்றில் இறக்கைவிரித்துக்
காத தூரம் "கட்டிப்" பறக்கும்
அப்பாவி அப்பனுந் தேவையில்லை!


................... குண்டெறி
குடிமத்துள் உலாவரும் சிங்கள இராணுவத்துக்கு
கோதாரி தானாய் வரும்
வெட்டியும்,வேல்பாய்ச்சிப் பெண்மையைப் பிய்த்தெறிதலும்
பிஞ்சுகளின் விழிகள் முன்னே
சிங்களத்துக் காடைக்கூட்டத்துக்கு வியர்த்துவிடும்!


பிறகென்ன?


"மாவீரர்கள்" மனத்தளவில் தயார்!
தரணம் பார்த்துச் சொல்:
..........................சிங்களவன் கொலைக்காரன்
...........................எங்கள் பெற்றோரை,உற்றோரைப்
பேசுமெங்கள்"தமிழை"அழித்திட்ட மிருகம்!
................."போரைத் தவிர வேறொரு வழி?
........................கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க-



சிங்களத்துக்கு:
தேச ஒருமைப்பாடு,"ஒரே தேசம்-ஒரே இனம்!"நாம் ஸ்ரீலங்கர்கள்.
பயங்கரவாதம்.


தமிழுக்கு:
தமிழீழம்,சுயநிர்ணயம்-தாயகம்!
தேசியம்,
தமிழ்-சமூகவிரோதி.
மாவீரர்
துரோகி,
ஒட்டுக்குழு-இனத் துரோகி,தேசத்துரோகி!
எடுத்துவிடு
இன்னும் ஓராயிரம்"புரியா மொழியில்"எந்த நிகழ்வுக்கும்
எங்கேயுமொரு காரணம் இருப்பது புரியும்.



வேறு,


நம்பிக்கையறுந்த நடுச்சாமப் பொழுதில்
தூக்கத்தின் தற்கொலையில்
புரண்டும்,நிமிர்ந்தும் விழிமறுத்த
தூக்கத் தற்கொலையைத் தடுக்கமுடியாத தவிப்பு


அகதிச் சங்கிலியில் பிணைத்துப் போட
ஒரு வாழ்வும்,ஏதோவொரு எதிர்பார்ப்பும்
ஊரிழந்தும் உணர்வு வெளிக்குள் நங்கூரமிட்டபடி
திசையறியத் தெருவுக்கு வழித் துணை தேடுவதைப்போல்


தீப்பட்டு வெந்தவிந்த
விறகுக்கு"முன்னம்"விறகென்று எவரிடுவார் நாமம்?
கரிக்கட்டை"விறகாகா"வினைப் பயனே
அகதியப்"புலப் பெயர்வு"பெருவாழ்வுக்கும்.


அச்சப்பட்ட மனதின்
பேரிரைச்சலுக்கு
எதையுந் தயாரித்திட
திக்குந் தெரியும்-திசையுந் தெரியும்
துப்புவதற்குத் துணைபோகாதிருக்கும் வரை!



ப.வி.ஸ்ரீரங்கன்
07.05.2005