Freitag, 23. Januar 2009

அம்பலத்தாவது...

இப்போதெல்லாம் உறவகள்
திடீர்,திடீரெனப் பிறக்கும்-இது
உயர்ந்த அன்பளிப்போடு
விழிபார்த்துப் புன்னகைத்து
உருகி மொட்டவிழ்க்கும் இதயங்களோடு
கசிந்து கண்ணீர் மல்கும்

நேற்றையவுறவும்
இன்றைய கூட்டும்,கும்மாளமும் புதிதல்ல
ஆடுகள் எருதுகளோடு இணைவதில்லை
நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை

இது
இங்கு புதுமையாக
அங்கும் புதுமையாக...

அம்பலப்படுவது
அவர்களில்லை
இவர்களது தாகம் ஒப்பற்ற விடுதலையானால்
ஒருக்காலும்
ஒய்யாரமிக்கதான'சொகுசுப் பயணத்துக்கு'
எதிரியின் காலில் எச்சிலூறும் நாவைப் பதித்திருக்கார்

அப்போதெல்லாம்
நோட்டீசு ஒட்டியதுகளும்
உணவு பரிமாறியதுகளும்
பயங்கரவாதிகளெனப் பிடித்து விலங்கிட்ட அரசு

உலங்கு வானூர்த்திகளில்
உருவப் பருமனுடைய பெருக வாழ்ந்து
வெளியுலகைத் தரிசித்தவர்களையும்
கைகோர்த்துக் கொண்ட கண்ணிய வா(ள்)ன்களையும்
விலங்கிடாது வழிவிட்டது சிங்கள நண்பர்களாக

ஸ்ரீலங்கா ரத்தனா
இப்படியாக நம்மவரை
வந்தடைந்தது-
கொடுத்ததை
அப்படிக் கொட்டியது அரசு


கூட்டத்திலிருந்த
குரங்கொன்று வெளிக்காற்றால் அள்ளுண்டு போக
சுகத்தைக் குறைத்ததாய்ச் சில கிழங்கள்
கடைவாய் கிழித்து முனகியது அப்போ!

பாருங்கள்
இவர்களுக்கு
பசிப்பது தேசிய நலனாம்
மற்றவர்களுக்குப் பசிப்பது துரோகமாம்!
தூ...

Keine Kommentare:

Kommentar veröffentlichen