Freitag, 23. Januar 2009

எனது கச்சையை இறுகப் பிடித்துக்கொண்டு...

கற்புச் சொல்லும் ஆண்!


ஒருத்தி எதையோ சொல்லிக் கொள்ள
உருப்படியற்ற எதையோ எனக்காகவாகவும் உனக்காகவாகவும்
சில பைத்தியங்கள் சுவர்களில் எழுதிக் கொள்கின்றன(ர்)


அந்தப் பைத்தியத்தியங்களிலொன்றின் அரிப்பு இதோ:-


அரிப்பெடுத்த எனது ஆண்குறி
அல்குல் வழித்துவராக் கனவில் இன்னொருத்தியின்
மார்புக்காம்பைக் கோவில் வாசலில் திருகிக் கொள்ளக்
கரங்களைத் தயாராக்கியது


எனது சமயக் கதைகள் இவற்றையும் கடவுள் பெயரில்
காவியமாக்கும்,கதைகளாக்கும்!
உப்புக்கு வழியற்றவளின் உறவோ
ஒரு செம்பு நீருக்கும்
அதுள் வேகும் அரிசிக்குமான தேவையில் அமையும்


அவளுக்கு அம்பாளின் சமனமும்
அளப்பரிய கற்புமுடியும் அவசியமென
அரிப்பெடுத்த எனது ஆண்குறி அறிவுப்புச் செய்கிறது
அப்பப்ப செருகிக்கொள்ளும் ஆசையோடு


நேற்றைய குருதிவெடில்
நாசித்துவாரத்தை விட்டகலா இன்றைய பொழுதில்
எனது அப்பனும்,பாட்டனுமிட்ட அதே கதைகளை
நானும் புதிப்பித்தபோது எனது "விருப்பு" விலங்குடைத்தது


"தொப்புளில் நா பதித்து
அரசிலை தடவி..."
சீதையையெண்ணக் கம்பனின் இரசம் மேலெழும்பிக் கொண்டது


எனது முகத்தை தரைக்குள் ஆழப்புதைத்படி
இப்போது சொல்வேன:;
"எனது குலத்துப் பெண்ணை நான் கனவிலும் புணரேன்
அவள் எனது தாய்-மாதா!"
பாரதத்தின் குலத் தோன்றலான எனக்குப் பெண்மையும்
குலமேன்மையும் தேச மானத்தின் கருவறை!


எனது கச்சையை இறுகப் பிடித்துக்கொண்டு
கிஞ்சித்தும் கலாச்சாரம் மாசடையாதிருக்க
பெண்ணினது கழுத்தில் "தாலி"யேற்றிவிடத் துடித்தால்
கூலி தரத்தக்க நிலையில் அவள் நிலையில்லை


நடுச்சாமத்தில் போயோட்டியின்
உடுக்கையின் ஒலியில் அவள் பிடவை விலக்கப்படும் நடுவீட்டுள்
அதைப் பேயினது பெயரால் கிராமமும் அங்கீகரிக்கும்


இத்தனைக்கும் பிறகும்
எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது-
கருக்கலைத்துக் கொள்ள வரும் சிறுசை
"பெரியவளின் ஒப்புதலோடு"
உறவுக்குப்பிறகிடும் மருந்தே ஆழச் சென்று அதைக் கொல்லுமெனுஞ் சாக்கில்
மீளக் கலைக்கும் அவள் துணிகளை!

இதுவே-
எனதும்,உனதுமான
தமிழ்க் கலாச்சாரத்தின்"உயரிய"பெண்மதிப்பீடு.


-ப.வி:ஸ்ரீரங்கன்
26.09.2005

Keine Kommentare:

Kommentar veröffentlichen