Montag, 28. Dezember 2009

செங்கதிர் சேகரா!

போர்-"ஆசிரியர்" பெரி-துவக்க...


புலி எழுதிய நந்திக்கடற்கரை நெற்றியின்
அயல் எழுதிய கைமுனுவும் சிங்கமும்
வன்னியும் தம்பொழில் யுத்தப் பிரமுகர்
ஏவல் கேட்பப் பாரத-பார் அரசு ஆண்ட
காவிக் கழிசடைக் காந்திக் கொற்றம்
நாளிதோறும் ஈனக் குரல் இயம்பும்;கல்வியர்
அஃதாவது விடுதலை நமக்குஇன்று ஆம் என்று
ஈழம் தன் குடிகளைக் கூஉய்க்,
துப்பாக்கியும் பிணவாடையும் சுமந்து குடியழிய
கோவேந்தன் கரிகாலன்தம் புதல்வன் தன்கூட்ட சகிதம்
குனியக் கண்ட பக்ஷ கோடாலிக் கொத்த வந்து தோன்றினான்-பிரபா.


வஞ்சம் செய்தார் கல்வியர் நந்திக் கடல் அமைய
குடிவளம் கவர்ந்தார் கறைஎன் கோயாம்?
வன்னிக் குடிஅழித்தார் பொய்யும் சூதும்
வஞ்சம் செய்வோர் வடிவுஎன் கோயாம்?
விடுதலை வேட்கையும் தாயின் கனவும் இழந்தே
சரண் புகு ஒளித்தார் முகம்என் கோயாம்?

இன்புற தம்மக்காள் இடர்எரி அகம்மூழ்கத்
துன்புறா இலாபங்காண் முறுவல் வெண்பேய்கள் போல்
மன்பதை அழிந்து ஒளிய,போர்-ஆசிரியர் தவறிழைப்ப,
புதல்வரை இழந்தேன்யான் அவலம்கொண் டழிவலோ?
கல்விச்செம்மையின் இகந்தகோல் கல்வியர் தவறிழைப்ப,
இம்மையும் இசைஒரீஇ,இனைந்து "உம்பால்" ஏங்கி அழிவலோ?

இணைய-தளபதிகள் சூதுரைத்து எவர்மாண்டார்?
"எங்கணாஅ!"பொங்கி எழுந்தாயோ பொழிகதிர்த்
திங்கள் முகிலொடுஞ் சேணிலம் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுது நீஇப்போ பயன் யாது?
அடங்கு நீ சடங்கு முடித்து, அமுதூட்டப் படிப்புண்டு;
சிவசிவா!ஈழவக் கூத்தினுள் வந்தீண்டும்
ஆயக்கல்வியர் எல்லீருங் கேட்டீமின்;
பாய்திரை வேலிப் படுபொருள் நீ அறிதி;
செங்கதிர் சேகரா!மாசுகொள் மனிதரா நாம்?-
தவறறியாரோ அல்லர்;கடுப்பாய் உரைத்தேன் காண்!

கொடுங்கோலும்,போர்க்குடையும்,
வன்னிநிலத்து மறிந்து வீழ்தரும்
நங்கோன்-தன் கொற்றவாயில்
ஒற்றாடல் நடுங்க,நடுங்கும் உள்ளமும்;
இரவு வில்லிடும்;பகல்மிக் குண்டுவிழும்
இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;
"வருவதோர் துன்பம் உண்டு"
தேசியத் தலைக்கு யாம் உரைத்தும் நின்றதன் நடுவே;
நீ சிரஞ்சொடுக்கித் தாழ்ந்தது எங்கே?சொல் சேகரரே-சொல்!

ப.வி.ஸ்ரீரங்கன்

28.12.09