Dienstag, 17. November 2009

எரி அடுப்புள் நுழையக் கற்றுக் கொள்கிறேன்...

ஊனினை அழிக்க...
 
இன்றென் மூளையை அறுத்து
அவியலிட ஆசை கொண்டேன்
அலுப்புத் தட்டும்போதும்
அருவருப்பு ஏற்படும்போதும்
அடுப்புக்குள் கூனிக்கொண்டு நுழைய விரும்புகிறேன்
 
முடியவில்லை!
 
எங்குமே எதிரிகளான சூழல்
 
புறமெங்கும் என் சாயலின்
மனிதர்கள் தொலைக்கப்பட்டார்கள்
எனக்கும் சாவுமணி அடிக்க
படையெடுக்கும்"அழகு மேனி"
 
எப்படி வாழ்வேன்?
எதையிட்டு மகிழ்வேன்?
 
என்னைத் தொலைத்த தெருவினில்
என் குழந்தைகள்
தம்மைத் தொலைக்க ஆயுத்தமாகின்றனர்
 
"கருப்பு" எச்சங்கள்
எல்லைப் புறத்தே தள்ளி வீசப்பட்டன
ஏதோவொரு மூலையில் என் இதயம் துடித்தது

என் சந்ததி
தொலைக்கப்பட்ட தம்
மூதாதையரைக் கண்டுகொள்ளவில்லை!
 
ஆங்கிலத்தில்
தனது அடையாளத்தைச் சொல்லிக்கொண்டது ஒரு அடிமை
தொலைந்தது
தானும் தன் சந்ததி என்பதையும் மறந்திருக்க
தெருமுனையில்
தன்னையே துரோகி என்றது இன்னொரு அடிமை
 
எப்படி எழுந்து மீள்வேன்?
 
எவருக்குமே என் சாவு தெரிந்திருக்கவில்லை
எல்லோருமே அதை வரவேற்றபோது
அவர்களிடமிருந்த முகங்கள் தொலைந்திருந்தன
 
எதன்பெயராலும்
எதன் பொருட்டும் என் தாயைக் கற்பழித்தேன்
வாழ்வதற்கு நியாயம் எனக்கு இருப்பதற்கு
 
அவளுக்கு நியாயம் சொல்லும்வரை
நான் அழிந்தே போக வேண்டும்
 
அந்தத் தடையமற்ற பொழுதின் திசையுள்
அவளது இருப்பு
தொடர் இருட்டில் நிலவக் கூடும்
 
அதற்காகவேனும்
எரி அடுப்புள் நுழையக் கற்றுக் கொள்கிறேன்...
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
17.11.2009

Sonntag, 15. November 2009

எல்லோருக்குமான ஒரு வீதியில்...

மதில்கள் வீழ்ந்தன...
 
 
க்களுக்கும்,
தமக்கும் இடையில்
இரும்பைக்கொண்டு வேலி அமைத்தபடி
தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்,
ஐரோப்பா,
கிழக்கு ஜேர்மனியின் மதில்கள் வீழ்ந்ததன்பொருட்டு
புதிய உலகைத் திறந்ததென.
 
சுதந்திரம்,சகோதரத்துவம்,
ஜனநாயகம் தமது புதிய உலகத்தின்
அத்திவாரம் என்பதும் அவர்கள் கூற்று.
 
இரும்பு வேலிக்குப் புறமாக
மக்கள் ஆரவாரித்துக் கரம் கொட்ட
மக்கள்முன் மதில்கள் அமைத்துத்
தம்மைப் பாதுகாத்தனர் தலைவர்கள்!
 
இவர்களிடமிருந்து
தம்மைப் பாதுகாக்க
மதில்கள் அமைத்தனர் அன்றைய கிழக்கு ஜேர்மனியத் தலைவர்கள்...


 
எல்லாஞ் சரிதாம்!
 
எதற்க்கெடுத்தாலும் அமைதி
சமாதானம்,சகோதரத்துவம்,
ஜனநாயகம் சொல்லும் தலைவர்கள்
யாரிடமிருந்து தம்மைப் பாதுகாக்க வேலி அமைக்கின்றனர்?
 
எல்லோருக்குமான ஒரு வீதியில்
யாரோ சிலர் கார் ஒட்ட
அடைப்புகள் இட்டார்கள்.
பின்னாளில்,
வீதியில் தமது கார்கள் மட்டுமே செல்ல முடியுமெனவும் சொன்னார்கள்.
 
இதை,
ஜனநாயகம் என்றும்,தனியுடமை என்றும் சொன்னார்கள்.
எனக்கும்,எனது கூட்டத்துக்கும்
நச்சுவாயு அறைகள் கட்டியவர்கள்
நடுத்தெருவில் நின்று நறுமணமிக்க தமது வரலாற்றைச் சொல்கிறார்கள்!
 
பழைய ஐரோப்பா
பாட நூலிலிருந்து மாயமாய் மறைந்துபோகிறது...
 
மக்களது தெரிவில்
இவர்கள் மீட்பர்கள் என
ஊடகங்கள் பேசுகின்றன-அவை
கெட்டியாய் சொல்வதெல்லாம் விடுதலை என்பதாகத்
தலைவர்கள் தமக்குத்தாமே மொழி பெயர்த்தார்கள்.
 
கொட்டும் மழையில்
தலைகளை நனையக்கொடுத்தவர்கள்
கொடும் புயலில் சிக்கிய
தமது உறவுகளை மறந்து,
மதில்களின் வீழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்!
 
மதில்கள்,இரும்பு வேலிகள் சிறைகளெனின்
வன்னியிலும்,வேறு பல பரப்புகளிலும்
சிறைகள் வேலிகளாக விரிகின்றன
மதில்களை வீழ்த்தும் வல்லமையுள்ள தலைவர்கள்
சிறையுடைக்க...
 
மதில்கள் வேண்டாம்,
இரும்பு வேலிகள் வேண்டாம்...
இவர்கள் இவற்றை வீழ்த்துவதெனும் பெயரில்
புதிய இரும்பு வேலிகளை
எமக்கும் தமக்கும் இடையில்
கட்டிவிடுவர் ஜனநாயகத்தின் பெயரில்!
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
11.11.2009